அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை (பிப்ரவரி 24) இந்தியாவுக்கு வரும் நிலையில் இந்தியாவுக்கு மட்டுமல்ல; டிரம்புக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே தான் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம், ‘நான் இந்தியாவுக்குப் போகிறேன்… நான் இந்தியாவுக்குப் போகிறேன்’ என்றே பேசி வருகிறார் டிரம்ப். அதேநேரம் உலகிலேயே இந்தியாவில்தான் இறக்குமதிக்கு வரி அதிகம் என்பதையும் பதிவு செய்து வருகிறார்.
டிரம்ப் வருகையின்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்திடப்படுமா அல்லது பிரமாண்டக் கொண்டாட்டமாக இது போய்விடுமா என்றெல்லாம் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பாகுபலி படத்தின் வீடியோ காட்சியில் தன் தலையைப் பொருத்தி தயாரிக்கப்பட்டு ட்விட்டரில் உலாவரும் வீடியோவை ரீட்விட் செய்துள்ள டிரம்ப், ‘இந்திய நண்பர்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பாகுபலி கதாநாயகன் பிரபாஸின் தலைக்குப் பதிலாக டிரம்பின் தலை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப்பின் மகள், மனைவியும் வீடியோவில் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த வீடியோவை ரசித்துப் பார்த்துள்ள டிரம்ப், அதை ரீ ட்விட் செய்ததால், உலகம் முழுதும் மீண்டும் பாகுபலி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது.
**-வேந்தன்**�,