�
ஹைட்ரோ கார்பன் தொடர்பான திமுகவின் கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நல்ல செய்தி வரும் என்று பதிலளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. துறை ரீதியான கேள்விகளுக்கு முதல்வரும், அமைச்சர்களும் பதில் அளித்து வருகின்றனர். அப்போது டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் புதிய திட்டத்திற்கு அனுமதி இல்லை என்று முதல்வர் கூறினார். ஆனால் டெல்டாவில் ஏற்கனவே உள்ள பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவை அரசு தாக்கல் செய்தால் அதற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர், விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
**கவிபிரியா**�,