குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் முக்கிய நபராக உள்ள சித்தாண்டி சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரூப் 4 முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும், கருப்பாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ள நிலையில் இன்று மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மாணிக்கம் உட்பட 3 பேர் சிபிசிஐடி பிடியில் உள்ளனர்.
இதனிடையே குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்ட சிவகங்கையைச் சேர்ந்த போலீஸ் சித்தாண்டியை விசாரணைக்காக சிபிசிஐடி தேடி வந்தது. இவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக முதலில் தகவல் வெளியான நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் பணியிலிருந்த அவர் விடுப்பு எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவராத நிலையில் இன்று சென்னை போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் சில முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், குரூப் 4 முறைகேட்டில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார் என்பவர் வீட்டில் சிபிசிஐடி இன்று சோதனை நடத்தி வருகின்றது. ஆனால் இதுவரை ஜெயக்குமார் எங்கிருக்கிறார் என்ற விவரங்கள் தெரியவரவில்லை.�,