சொன்னதை நிரூபித்தால் பாஜகவில் இணையத் தயார்: உதயநிதி

தன்னைப் பற்றி பாஜக கூறியுள்ள தகவலை நிரூபித்தால் பாஜகவில் இணையத் தயாராக இருப்பதாக ட்விட் ஒன்றுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலில் காலூன்றப் போவதாக வரும் செய்திகளால் எதிர்க்கட்சியினர் கடுமையாகத் தாக்கிவருகின்றனர். குறிப்பாகக் குடும்ப அரசியலை மையப்படுத்தி விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக இளைஞரணி தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி.சூர்யா நேற்று (ஜனவரி 24) தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆதரவாளர்கள், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்டாலின், கனிமொழியின் வாரிசு அரசியலை மறைக்கின்றனர். அவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசுவதில்லை. அவர்களைத் தமிழிசையுடன் ஒப்பிடுகின்றனர். தமிழிசை வேறு பாதையைத் தேர்ந்தெடுத்து, பாஜகவில் இணைந்தார். 15 ஆண்டுகளாகக் கஷ்டங்களைத் தாங்கியே இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். குடும்ப அரசியலால் முன்னேறவில்லை” என்று விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கட்டுப்படுத்தும் திமுக அறக்கட்டளையில் உதயநிதிக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையும் நியாயப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.