பாண்டியில் மையமிட்ட இளம் கூட்டணி!


சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் சசி திரையுலகில் அறிமுகமாகி இருபது ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இதுவரை ஏழு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இந்த இருபது ஆண்டுகளில் தமிழ் சினிமா பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ள போதும் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் முதன்முறையாக சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இனைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுவருகிறது. இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதுடன் சித்தார்த் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றியுள்ளார்.
சித்துக்குமார் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரசன்னா.கே.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிவருகிறது.