வசனம் எழுதும் விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி நடிப்பில் மாதம் இரண்டு படங்களாவது வெளியாகிவிடும் என்று சொல்லுமளவுக்கு அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இந்நிலையில் நடிப்போடு சேர்த்து வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றிவருகிறார்.
விக்ராந்த் தனது சகோதரர் சஞ்சீவ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு விஜய் சேதுபதி வசனம் எழுதுகிறார். 2015ஆம் ஆண்டு தாக்க தாக்க படத்தை இயக்கினார் சஞ்சீவ். அந்த படத்தை முடித்த பின் விஜய் சேதுபதிக்காக ஒரு திரைக்கதையை அமைத்து அவரிடம் கூறியுள்ளார். அப்போது பல்வேறு படங்களில் அவர் ஒப்பந்தமாகியிருந்ததால் அந்த படம் முடிவாகவில்லை. வேறு ஒரு கதையுடன் சஞ்சீவ் பின்னர் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். இந்த படத்திற்கான வசனங்களை நான் எழுதுகிறேன் என்று கூறியுள்ளார். சஞ்சீவ், விஜய் சேதுபதி இணைந்து திரைக்கதை அமைக்க, விஜய் சேதுபதி வசனங்களைப் படப்பிடிப்புக்கு இடைப்பட்ட நேரங்களில் எழுதி முடித்துள்ளார்.
இந்தத் திரைக்கதையில் விக்ராந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதியே பரிந்துரைத்ததன் பேரில் அவர் படக்குழுவுடன் இணைந்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுவருகின்றனர். நவம்பர் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.