திமுக கூட்டணி: மதிமுக தீர்மானம்!


மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலைக் குழு, ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆய்வு மையக் குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 26) காலை அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் மதிமுக தொடர வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கிப் பேசியிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் கோருவது என்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வது ஏன் என்பது குறித்த விளக்கத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியவும், திராவிட இயக்கத்திற்கு விடப்படும் அறைகூவல்களை எதிர்த்து முறியடிக்கவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணியில் தோழமைக் கட்சியாக இணைந்து செயலாற்றி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ள அத் தீர்மானத்தில் மதிமுகவின் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு செவ்வனே நிறைவேற்றும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகக் கூட்டங்களை நவம்பர் 5-ஆம் தேதிக்குள் நடத்தி, நவம்பர் 25-ஆம் தேதிக்குள் ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிப் பணிக் குழுக்களை அமைக்க வேண்டும்.
நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடிப் பணிக்குழுக்களின் பட்டியலைத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும், ஊழல் புகாருக்கு ஆளாகி சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பன உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.