இந்திரா நூயி: ஐசிசியின் முதல் பெண் இயக்குநர்!


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முதல் சுயாதீன பெண் இயக்குநராக பெப்சிகோவின் தலைவர் இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துபாயில் பிப்ரவரி 9ஆம் தேதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்திரா நூயி ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசியின் தலைவர் சஷான்க் மனோகர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் ” எங்கள் வாரியத்தில் உள்ள திறமைகள் அனுபவம் நிறைந்த வேட்பாளரைத் தேர்வு செய்ய நாங்கள் ஒரு உலகளாவிய தேடலை மேற்கொண்டோம். உலகின் மிகப் பெரிய நிறுவனமான பெப்சிகோவின் இயக்குநர் மற்றும் வணிகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒருவரை இப்பதவிக்குத் தேர்வு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு பற்றி தெரிவித்துள்ள இந்திரா நூயி, ”கிரிக்கெட் விளையாட்டை நான் நேசிக்கிறேன். நான் பள்ளியிலும், கல்லூரிகளிலும் விளையாடியுள்ளேன். கிரிக்கெட் மூலம் இணைந்து செயல்படுதல், கூட்டுமுயற்சி மற்றும் ஆரோக்கியமான போட்டி போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். ஐசிசியுடன் இணைவது உற்சாகமாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை வளர்ச்சியடையச் செய்யவும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விளையாட்டின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கச் செய்யவும், புது அர்த்தத்தை உண்டாக்குவதற்கும் ஐசிசியில் இருக்கும் நண்பர்கள், பங்குதாரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவேன். இந்தப் பொறுப்பை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார். ஐசிசி-க்கு மொத்தமாக 17 இயக்குநர்கள் உள்ளனர்.