விலங்குகள் நல வாரியம் இடமாற்றம்!


விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னை திருவான்மியூரிலிருந்து ஹரியானாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திரைத் துறையினருக்குச் சவாலாக இருந்துவருவதில் தணிக்கைத் துறையோடு சமீப காலமாக இணைந்திருப்பது விலங்குகள் நல வாரியம்தான். மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாகுமா, ஆகாதா எனப் பெரிய கேள்வியை எழுப்பியது, அந்தப் படத்தில் புறாக்கள் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட காட்சி. கிராபிக்ஸ் புறாக்கள் என்று சொன்ன படக்குழு அதற்குப் போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காததால் படத்திற்குச் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நடைபெற்றது. இதற்கிடையில் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததும் அதன் பின் படம் வெளியானதெல்லாம் தனிக் கதை.
கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ரேக்ளா பந்தயம் தொடர்பான காட்சிகளை அனுமதி பெறாமல் படமாக்கியதாக படக்குழு மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. படத்திற்காக ரேக்ளா பந்தயம் நடத்தவில்லை என்றும் ரேக்ளா பந்தயத் தலைவர் நடத்திய போட்டியைத் தாங்கள் படம்பிடித்துக்கொண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.