எடப்பாடியை இழுத்த ஹெச்.ராஜா தம்பி!


பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரர் சுந்தர் தன்னைப் புகைப்படமெடுத்த பத்திரிகையாளரைத் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான ரூ.32.84 லட்சம் நிதி முறைகேடு செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சகோதரரும் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்து வந்தவருமான சுந்தர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணி ஓய்வு பெறும் அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக சுந்தர் உள்ளிட்ட 21 பேர், திருச்சி ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்னிலையில் நேற்று (பிப்ரவரி 9) ஆஜராகினர். டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், குற்றப்பத்திரிகையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டவர்கள், அங்கிருந்து வெளியேறினர்.
அப்போது, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விகடன் புகைப்பட கலைஞர் மணிகண்டனை நோக்கி ஆவேசமாக வந்த சுந்தர், அவரைத் தாக்கி கேமராவை பறிக்க முயன்றார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புகைப்படக்காரர், உங்கள் பெயர் என்ன எனக் கேட்டபோது தன்னுடைய பெயர், எடப்பாடி என்று கூறியபடியே அங்கிருந்து கிளம்பினார்.