நெல்வயல் சேதம்: டிஎஸ்பி ஜெரினா பேகத்துக்கு சம்மன்!

நிலத்தகராறில் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழுது சேதப்படுத்திய விவகாரத்தில் டிஎஸ்பி ஜெரினா பேகம், நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது தம்பி தியாகராஜன். இவர்களது குடும்பத்துக்குச் சொந்தமாக 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமை தியாகராஜனின் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் இருந்துள்ளது. பின்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது.
பாகப்பிரிவினைக்குப் பிறகு சாமுண்டீஸ்வரிக்கும், அண்ணாமலை மகள் சாவித்திரிக்கும் இடையே இரண்டு ஏக்கருக்கு நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. சாவித்திரி தனது நிலத்துடன் பிரச்னைக்குரிய இரண்டு ஏக்கர் நிலத்திலும் நெற் பயிரிட்டுள்ளார்.
நிலத்தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சாவித்திரி மற்றும் சாமுண்டீஸ்வரியிடம் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பிரச்னைக்குரிய நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நிலத்தை சமன்படுத்தவும் முயன்றுள்ளனர்.
அப்போது நெற்பயிர் கதிர்விடும் நிலையில் இருக்கும்போது அதைச் சமன் செய்வது சரியல்ல என்று கூறி சாவித்திரி தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதை ஏற்க மறுத்து, ஆரணி டிஎஸ்பியாக இருந்த ஜெரினா பேகம் வயலை டிராக்டர் விட்டு சமன் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அறுவடைக்குத் தயாரான நெல்வயலை டிராக்டர் கொண்டு சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சேதமடைந்த நிலத்தை நேரில் ஆய்வு செய்து, “டிஎஸ்பி ஜெரினா பேகம் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து டிஎஸ்பி ஜெரினா பேகம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பிறகு சென்னை மாநகர ஆன்டி வைஸ் ஸ்குவாட் என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டார்
இந்த நிலையில் நெல்வயல் சேதம் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து ஜெரினா பேகத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.