தென்காசியிருந்து திரும்பிய தனுஷ்


மாரி 2 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தனுஷ், அதனை முடித்துவிட்டு அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகியுள்ளார்.
தனுஷ்-பாலாஜி மோகன் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பாலாஜியும் தனுஷும் மீண்டும் இணைந்து மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கிவருகிறார்கள். முதல் பாகத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது உருவாகிவரும் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துவருகிறார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 22ஆம் தேதி தென்காசியில் தொடங்கியது. படப்பிடிப்பின்போது வெளியான புகைப்படத்தில் தனுஷின் கெட்டப் முதல் பாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதைக் காண முடிந்தது. ஏனென்றால் மாரி என்ற கதாபாத்திரத்தின் அடையாளமாக இருந்த அந்த முறுக்கு மீசை, ஏற்றிச் சீவப்பட்டிருக்கும் முடி ஆகியவற்றை அந்தப் புகைப்படத்தில் காண முடியவில்லை.
இதனால் மாரி 2 படத்தின் கதை, ‘மாரி என்பவன் எப்படி உருவானான்’ என்பதைக் காட்டும் ஃபிளாஷ்பேக் ஆக இருக்கலாம் அல்லது அடிதடி, ரௌடித்தனம் போன்றவற்றை விட்டுவிட்டு திருந்தி வாழ்வது போன்று அமைக்கப்பட்டிருக்கலாம் என பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ளது.
சென்னையில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில், தனுஷ் தனது பழைய தோற்றத்தில் நடிப்பாரா என்கிற ஆவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.