தமிழகத்தில் 60 மணல் குவாரிகள் திறக்க முடிவு!

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை நீக்க இன்னும் இரண்டு வாரங்களில் 60 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையில் மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசு, மணல் குவாரிகளை முழுவீச்சில் இயக்கி மணல் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை இயக்குவதற்காக கனிமவளத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் திட்டமிட்டுள்ளபடி முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது 8 மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த மணல் குவாரிகளிடமிருந்து தினமும் 4 ஆயிரம் லாரி லோடு மணல் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்திற்குத் தினமும் 15 ஆயிரம் லாரி லோடு மணல் தேவைப்படுகிறது.
தமிழகத்தின் மணல் தேவையைக் கருத்தில்கொண்டு தஞ்சாவூர், நாகை, திருச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் 1 வாரத்தில் 40 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 வாரங்களில் 20 மணல் குவாரிகள் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.