நாராயணசாமியின் பக்கோடா போராட்டம்!


பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்புதான் என்று கூறிய பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பக்கோடா விற்று போராட்டம் நடத்தியுள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் வேலையின்மையைப் பற்றி பேசுகிறார்கள். இந்த சேனலுக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால்கூட நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம் என்று கூறி இருந்தார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. நாடு முழுவதும் இளைஞர்கள் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 5ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, பக்கோடா விற்று சில இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடியின் பக்கோடா விற்பது குறித்த கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேசிய பாஜக தலைவரும் எம்.பியுமான அமித் ஷா, “வேலையின்றி இருப்பதைவிட பக்கோடா விற்பது மேலானது, டீ விற்றவர் மகன் நாட்டின் பிரதமராக முடியும் என்றால் பக்கோடா விற்பவர் மிகப் பெரிய தொழிலதிபராக முடியும்" என்று கூறினார். மாநிலங்களவையில் அமித் ஷா பேசியதும் கண்டனத்திற்குள்ளானது.