ஊரக வேலைத் திட்டத்துக்கு நிதி!


ஜனவரி 31 வரையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பாக ரூ.51,600 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சரான ராம் கிரிபால் யாதவ் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தேவையைப் பொறுத்து மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன்படி, 2018 ஜனவரி 31 வரையில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ.51,616.99 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பள பாக்கியை வழங்கவும் திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவும் முடியும். சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்காக இழப்பீட்டுத் தொகையாக ரூ.75.89 கோடி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.