பிரிவினைவாத காங்கிரஸ்: மோடி


காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்ட மோடி, ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் கூறுவதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை என்று விமர்சித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 7) நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது, “இந்திய வளர்ச்சி குறித்தும், நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு நீங்கள் (எதிர்க்கட்சிகள்) நாடாளுமன்றக் கதவை மூடினீர்கள். சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் ஆன பின்னரும், காங்கிரஸ் செய்த பாவங்களுக்கான தண்டனையை 125 கோடி மக்களும் தினமும் அனுபவித்துவருகின்றனர். வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், அவை அனைவரின் நம்பிக்கையைப் பெற்று சுமுகமாக நடந்தன.
ஆனால், அரசியல் குழப்பத்திற்காக ஆந்திராவை காங்கிரஸ் அவசரகதியில் பிரித்தது. இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. நேருதான் இந்தியாவிற்கு ஜனநாயகத்தைப் பெற்றுதந்தது போன்று காங்கிரஸ் பேசுகிறது. கர்நாடக சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா காலத்தில், பிஜ்வாலா ஆட்சிக்காலத்தில் அரச சபையில் பெண்களுக்கு இடமளிக்கப்பட்டது. 12ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கி இருந்துள்ளது. இந்தியா நீண்டகாலமாகவே ஜனநாயகத்தைப் போற்றி வளர்த்துள்ளது” என்று காங்கிரஸ் மீதான தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், காங்கிரஸும், முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இந்தியாவில் ஜனநாயகத்தை வளர்த்தெடுத்ததாக கார்கே கூறியதை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, வல்லபாய் படேல் நாட்டின் முதல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த காஷ்மீரும் நம்மிடமே இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
”ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் சொல்லும் பாடத்தைக் கேட்பதற்கு இந்தியாவில் யாரும் தயாராக இல்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிசம்பரில் எப்படி முடிசூட்டு விழா நடந்தது என்பதை நாம் பார்த்தோம். மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துவருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், மின்சார வசதி செய்துகொடுப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்திவருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன” என்றும் அவர் பேசினார்.