உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க சின்னம் வேண்டும்!


தனிக்கட்சியும் சின்னமும் இருந்தால் தான் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அணி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நேற்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. இதில் தினகரன் அணியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளரும் மதுரை மண்டல பொறுப்பாளருமான தங்க தமிழ்செல்வன் கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எழுச்சி காணப்படுவதாகத் தெரிவித்தார்.
“மாவட்டவாரியாக தொண்டர்களைச் சந்தித்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியைப் பார்க்கிறேன்.
அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் நம்மிடம் இல்லை என்பதால், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, நமக்கு தனிக்கட்சியும் சின்னமும் தேவை. இதனை கருத்தில்கொண்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை நடந்து வருகிறது. அதற்காக, புதிய கட்சி அறிவிப்பை வெளியிட துணை பொதுச்செயலாளர் தினகரன் தயாராகி வருகிறார். புதிய கட்சிக்காக ஒரே ஒரு சின்னத்தைப் பெற்று, அந்த சின்னத்தில் போட்டியிட்டு நாம் வெற்றி பெறுவோம்” என்றார்.