குளுக்கோஸ் பாட்டிலில் வெண்துகள்கள்!


கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவிக்குச் செலுத்திய குளுக்கோஸ் பாட்டிலில் வெண்துகள்கள் இருந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், காரமடை குந்தா காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவியான விசுதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்று (பிப்ரவரி 6) காலை குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.
குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தபோது, அந்தப் பாட்டிலில் வெண்துகள்கள் படிந்து காணப்பட்டன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விசுதாவின் பெற்றோர் அங்கிருந்த செவிலியர்களிடம் இது குறித்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து, செவிலியர்கள் வெண்துகள்கள் படிந்த குளுக்கோஸ் பாட்டிலை அகற்ற முயற்சி செய்தனர். விசுதாவின் பெற்றோர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது. உடனே செவிலியர்கள் அந்த வார்டைப் பூட்டியுள்ளனர்.