மாலத்தீவில் அவசர நிலை: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!


மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அருகிலுள்ள மாலத்தீவின் அதிபராக மாலத்தீவு முற்போக்குக் கட்சித் தலைவர் அப்துல்லா யாமீன் உள்ளார். அவருக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 12 பேர் போர்க்கொடி தூக்கியதால் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து 12 பேரையும் தகுதி நீக்கம் செய்து யாமீன் உத்தரவிட்டார். பலரையும் சிறையில் அடைத்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 12 பேரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த யாமின் கடந்த திங்களன்று மாலத்தீவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அன்றாடச் சேவைகள் மற்றும் வணிகத்துக்கு எந்தத் தடையும் இல்லை என யாமீன் அறிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்.பி.க்களைக் கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியது.
யாமீனின் சகோதாரரும் முன்னாள் அதிபருமான மவுமூன் அப்துல் கயூமை மாலத்தீவு போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 6) அதிகாலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்துல்லா சயித் மற்றும் நீதிபதி அலி ஹமித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலைகளில் ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகிறது.
அவசர நிலை அறிவிப்பாலும் அதையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளாலும் மாலத்தீவு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலத்தீவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அந்த நாட்டின் அரசியல் நெருக்கடியை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.