ஒரே ஊசி: 40 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பலருக்குப் பயன்படுத்தியதால் 40 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை ஏற்படுத்திய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில் ஒரே ஊசியைப் பலருக்குப் பயன்படுத்தியதால் 40 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதற்கு என்ன காரணம் எனக் கண்டறிவதற்காக பங்கார்மாவ் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டது.
இந்த முகாமுக்கு வந்திருந்த 566 பேரில் 40 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பதை மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 40 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராஜேந்திர குமார் என்ற போலி மருத்துவர், ஒரே ஊசியைப் பலருக்கும் பயன்படுத்தி சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேந்திர குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் எச்ஐவி வைரஸைக் கட்டுப்படுத்தும் மையத்தில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.