பதவி ஆசை காட்டி பணம் பறித்த தீபா


அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி 1 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக , ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த மொத்த முட்டை வியாபாரியான ராமச்சந்திரன் காவல் துறை ஆய்வாளரிடம் அளித்துள்ள புகாரின் விவரம் பின்வருமாறு,
"ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை தலைவியாக ஏற்றுக் கொண்டு ,எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தேன்.
அவரது கார் டிரைவர் ராஜா என்னைத் தொடர்பு கொண்டு தீபா மிகவும் பணக் கஷ்டத்தில் உள்ளதாகவும், உடனடியாக பண உதவி கேட்டதாகவும் கூறி, ரூபாய். 50 லட்சம் வாங்கினார்.இதனையடுத்து பல சந்தர்ப்பங்களில் பல காரணங்களுக்காக நேரிலும், தொலைபேசியிலும் என்னிடம் பணம் கேட்டதால் சிறிது சிறிதாக சுமார் 25 லட்சம் வரை பணம் கொடுத்தேன்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீபாவின் கணவர் மாதவன் வீட்டிலிருந்து 50 லட்ச ரூபாயைத் திருடி சென்று விட்டதாக கூறி அழுது அவசர செலவுக்காக தீபா 10 லட்சம் கேட்டார். இதையும் அவரது டிரைவர் ராஜா முன்னிலையில்தான் கொடுத்தேன்.
மேலும், தீபாவும், ராஜாவும் கட்சியினருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி , வேணு என்பவரிடம் ரூ.2 லட்சம், குடியரசு என்பவரிடம் ரூ.1 லட்சம், வெங்கடேஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம், கோவை சாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரம், சிவக்குமாரிடம் ரூ.30 ஆயிரம் என பலரிடமும் என் மூலமாக பணம் பெற்றுக் கொண்டனர்.இதன்படி தீபாவும் ,அவரது டிரைவர் ராஜாவும் இதுவரை சுமார் 1 கோடியே 12 லட்சம் வரை என்னிடம் வாங்கியுள்ளனர்.
மந்திரி ஆக்குகிறேன், மாவட்ட செயலாளர் ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார்கள் . எந்த பதவியும் எனக்கும் கிடைக்கவில்லை. என்னை சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையாவது திரும்ப தர சொல்லி கேட்டதற்கு தீபாவும் மாதவனும் நேரடியாகவும், ராஜாவின் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இந்த இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து என் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் " என கூறியுள்ளார்.
இந்த புகார் மனு குறித்த உரிய விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி தொடர்பாக தீபா, ராஜா இருவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.