மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தொடர்பாக டிவிட்டரில் ஒருவர் முன்வைத்த விமர்சனத்துக்கு, கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன் தற்போது அதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம்.இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்பதை ஏற்கனவே நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். இதை உறுதி செய்யும் விதமாக “ஜனவரி மாதம் வெளியான படங்கள் எதுவுமே லாபகரமாக இல்லை. பிப்ரவரி மாதமாவது நல்லபடியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபமடைந்து டிவிட்மேல் டிவிட் போட்டு விளாசி தள்ளினார். இதற்கு ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவனை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். விமர்சனம் எழுந்தால் அதை பார்த்துவிட்டு இப்படியா கோபப்படுவது. விமர்சனங்களை எப்படி சமாளிப்பது என்று மற்ற இயக்குநர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விக்னேஷ் சிவன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், “நெகட்டிவாக பேசினால் இனிமேல் ரியாக்ட் செய்ய மாட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். கோபமடைந்துவிட்டேன். உங்களிடமிருந்து அன்பான இயக்குநர் என்ற பெயரை வாங்கி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.