அரசின் திட்டம் அனைவருக்குமே!


அரசின் நலத்திட்ட உதவியைப் பெறுவதற்கு அதிமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில், அரசின் திட்டங்கள் அனைவருக்குமானது என பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று(பிப்ரவரி 4) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அரசின் அனைத்துத் துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. தொல்பொருள் துறையின் பரிந்துரையின் பேரில் மீனாட்சியம்மன் கோவில் மீண்டும் புதுப்பொழிவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் அகற்றப்படும்” என்று தெரிவித்தார்.
கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்விக்கு, “நான் ஜோசியர் அல்ல” என்ற பதிலளித்த பன்னீர்செல்வம், அதிமுகவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர் உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஆண்டு காவிரியில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய 81 டிஎம்சி தண்ணீர் பாக்கி உள்ளது என்று சுட்டிக் காட்டினார். காவிரியில் தண்ணீர் பெறுவது தமிழகத்தின் உரிமை என்றும், ஆனால், கர்நாடக அரசு அதைத் தர மறுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.