துப்பாக்கியால் பதிலடி கொடுங்கள்!


'பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி ஒருமுறை சுட்டால், எண்ணற்ற முறை பாகிஸ்தானை சுட வேண்டும்' என்று இந்திய இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(பிப்ரவரி 4) திரிபுரா மாநிலம் பர்ஜாலா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுக்க இந்தியா விரும்பவில்லை என்றும், அண்டைநாடுகளுடன் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவே இந்தியா விரும்புவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசும்போது, பாகிஸ்தான் ஜம்முகாஷ்மீரில் அமைதியைக் குலைக்கும் வகையில் இந்தியப் பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதாகவும் இந்தியா பொறுமை காப்பதைப் பாகிஸ்தான் பலவீனமாகக் கருதக் கூடாது,இந்தியா பலம் வாய்ந்த நாடு என்றும் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி ஒருமுறை சுட்டால், எண்ணற்ற முறை பாகிஸ்தானை சுட வேண்டும் என்று இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.