அமலா, சனுஷாவுக்கு ஆதரவாக நடிகர்கள்!


பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு எதிராக போலீஸில் புகார் கூறிய நடிகைகள் அமலா பால், சனுஷா ஆகியோருக்கு ஆதரவாக நடிகர்கள் விஷால், சசிகுமார் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமலா பால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி சென்னையிலுள்ள மாம்பலம் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார். சென்னையிலுள்ள நடனப் பள்ளி ஒன்றில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் புகார் அளித்தார்.
அமலாபாலின் புகாரின் பேரில் தொழிலதிபர் அழகேசனை போலீஸார் கைது செய்து அவர்மீது 354A (பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல்), 509( பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல்) , பிரிவு 4 (பெண் வன்கொடுமை சட்டம்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அமலா பால் தைரியமாக போலீஸில் புகார் அளித்ததற்காக நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "அமலா பாலின் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன். பாலியல் அத்துமீறலுக்கு எதிராக வழக்கு தொடர நிறையவே தைரியம் வேண்டும். இந்த வழக்கில் துரித நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதே போல் ரயிலில் பாலியல் தொந்தரவுக்குள்ளான கேரள நடிகை சனுஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகர் சசிகுமார்.
சில தினங்களுக்கு முன் மலையாள நடிகை சனுஷாவை ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்த தமிழக இளைஞர் திருச்சூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ரயிலில் உதவிக்காக சத்தமிட்டபோது பயணிகள் யாரும் வராதது நினைத்து வேதனைப்படுவதாகவும் சனுஷா தெரிவித்திருந்தார்