ஜாக்டோ - ஜியோ மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நேற்று (பிப்ரவரி 3) அறிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒன்பது நாள்கள் நடைபெற்ற இந்தப் போராட்டம் நீதிமன்ற உத்தரவையடுத்துத் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கில் ஆசிரியர்கள் சிலர் நீதிபதி கிருபாகரனை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நேற்று தெரிவித்துள்ளார்.