தனது இருக்கையில் மாணவியை அமரவைத்த ஆட்சியர்!


திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒன்பதாம் வகுப்பு மாணவியைத் தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அவர், பள்ளி மாணவ மாணவிகள் நலனுக்காகவும், உயர்கல்வி பெறுவதற்காகவும் நிதியுதவிகளை வழங்கியுள்ளார்.
வேங்கிக்கால் பொன்னுசாமி நகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பூஜா ஆட்சியரின் செயல்களைப் பாராட்டியும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமெனவும் கடிதம் எழுதினார். மாணவியின் கடிதத்தை ஏற்றுக்கொண்டுச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்கினார். இதையடுத்து, பூஜா தனது தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியரைச் சந்தித்தார்.
இருவருக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, பூஜா படிக்கும்போதே தனக்குக் கீழ் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதையும், அப்துல் கலாம் வழியில் சமூக சிந்தனையோடு மாணவி செயல்படுவதையும் அறிந்த ஆட்சியர் மாணவியைப் பாராட்டினார்.
இதையடுத்து மாணவியை ஊக்கப்படுத்திய ஆட்சியர் கந்தசாமி, தனது இருக்கையில் மாணவி பூஜாவை அமரவைத்து அழகு பார்த்தார்.