பட்ஜெட் உரையில் மாணவியின் கவிதை!


கேரள மாநிலத்தில் நடைபெற்ற பட்ஜெட் உரையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் கவிதை இடம் பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 2) தாக்கல் செய்யப்பட்டது. கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், பட்ஜெட் உரையைப் படித்தார். அப்போது, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக புதிய திட்டங்களை அறிவித்தார்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் விடுதிகள், ரூ.50 கோடி செலவில் பெண்கள் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்லேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு திட்டத்தை அறிவிக்கும்போதும் அமைச்சர் தாமஸ் கவிதை ஒன்றையும் வாசித்துள்ளார்.
மலையாள பெண் கவிஞர்கள் லலிதாம்பிகா அந்தார்ஜனம், வல்சலா, விஜயலெட்சுமி, கே.ஆர்.மீரா ஆகியோரின் கவிதைகளை மேற்கோள் காட்டிய நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் கவிதையையும் வாசித்துள்ளார்.
புலப்பட்டா பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி சிநேகா சமையல் அறையில் பெண்கள் என்பது குறித்து எழுதிய 12 வரி கவிதை கூகுளில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த கவிதையை .நேற்றைய உரையில் அமைச்சர் படித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர், “பட்ஜெட் உரையில் கவிதைகளை வாசிப்பதற்காக இணையத்தில் தேடியபோது மாணவியின் இந்தக் கவிதை தென்பட்டது. மனதைத் தொட்ட அந்தக் கவிதையில் சமையலறையில் பெண்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் செய்யும் பணிகள் குறித்து அழகாக பனிரெண்டு வரியில் தொகுக்கப்பட்டிருந்தது. இது பெண்களின் பட்ஜெட் உரையில் வாசித்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி வாசித்தேன். எனக் கூறினார்.