நீதிபதிகள் பிரச்னையில் தலையிட முடியாது: மத்திய அரசு!


‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பிரச்னையில் மத்திய அரசு தலையிடாது’ என மத்திய இணை அமைச்சர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்மேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி.லோகூர் ஆகிய நால்வரும், கடந்த ஜனவரி 12ஆம் தேதி காலை செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாங்கள் நான்கு பேரும் நீதித் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்த கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பினோம். நீதித்துறையில் இருக்கும் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் தெரிவிக்க விரும்பினோம். நீதித்துறையைச் சரிசெய்யாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும்” என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முயற்சி செய்து வந்தது.