அரசு மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு!


சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்த இளைஞர் மோகன் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்ரவரி 2) உயிரிழந்தார்.
சேலம், பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு மூன்று அண்ணன்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களிடையே பூர்வீக சொத்து விஷயத்தில் தகராறு இருந்துள்ளது. இது குறித்துப் புகார் அளிக்க நேற்று ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார் மோகன்.
சொத்துத் தகராறுக்குத் தீர்வு காண்பதற்காக தீக்குளிக்க முயற்சித்த அவர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பலமாக இருந்ததால் அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார் .
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் அவர் மீது மண்ணை வீசியும், பெட்ஷீட்டைச் சுற்றியும் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 97 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்ரவரி 2) உயிரிழந்துள்ளார்.
செயல்படாத தீத்தடுப்புக் கருவிகள்
மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்த மோகன் வலிதாங்க முடியாமல் மருத்துவமனைக்குள் ஓடியுள்ளார். அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் தீயணைப்பு சிலிண்டரை எடுத்து அணைக்க முயற்சித்தும், தீயணைப்பு வாயுவைக் கொண்ட சிலிண்டர் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.