ஓமந்தூரார் பிறந்த நாள் விழா!


சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள், முதன்முறையாக அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்ற ராமசாமி ரெட்டியார் விடுதலை போராட்ட வீரரும்கூட. 1947ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். இவரது ஆட்சிகாலத்தில்தான் கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்மூலம் தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குச் செல்லும் முழு உரிமையைப் பெற்றனர்.
இந்த நிலையில் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளான பிப்ரவரி 1ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜுவும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 124ஆவது பிறந்தநாள் விழா நேற்று (பிப்ரவரி 1) அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஓமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அவரின் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஓமந்தூரார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர்கள், மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சியையும் திறந்து வைத்தனர்.