நடிகைகளுக்குத் தொடரும் பாலியல் தொல்லை!


தமிழ், மலையாள நடிகையான சனுஷாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரையுலகைச் சேர்ந்த நடிகைகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு முன்பு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை வெளிச்சொல்லாத நடிகைகள் தற்போது துணிச்சலாகத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகப் புகார் அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை அமலா பால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கொடுத்த புகாரின்பேரில், அழகேசன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் மலையாள சினிமா உலகில் பல படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில் ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்த நடிகை சனுஷாவும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறார். கன்னூரிலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்திருக்கிறார் சனுஷா. அப்போது ஆண்டோ போஸ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். இதையடுத்து சனுஷா அளித்த புகாரின்பேரில் திருச்சூர் ரயில்வே போலீஸார் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.