தூத்துக்குடியில் ஒரு ஹாசினி!


சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினிக்கு நிகழ்ந்தது போலவே தூத்துக்குடியில் 6 வயது சிறுமிக்கு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
தூத்துக்குடி அருகே உள்ள கீழதட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி-லெட்சுமிக்கு சேந்தையன் (8), சிவசுப்பிரமணி (6), சிவகாமி (6) என மூன்று குழந்தைகள் உள்ளனர். சின்னத்தம்பி-லெட்சுமி இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
சிறுமி சிவகாமி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் போல் நேற்று (ஜனவரி 31) சிறுமி சிவகாமி, பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் திடீரென சிறுமியின் வீடு தீப்பற்றி எரிந்ததையடுத்து, அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் சிறுமி சிவகாமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீழத்தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
நேற்று சிறுமி சிவகாமி பள்ளி முடிந்து வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரிக்கண்ணன்(14) என்ற சிறுவன், சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். பின்னர் மாரிக்கண்ணன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். அதன் பின் சிறுமியின் உடலின் மேல் ஏராளமான துணிகளை போட்டு அதன் மீது தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் மாரிக்கண்ணனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.