ஜீவாவுக்கு வரிசை கட்டும் படங்கள்!


நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகவிருக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1) துவங்கியுள்ளது.
ஒரு சில படங்களே வருடத்திற்கு நடித்துவந்த ஜீவா தற்போது பிஸியாகியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் தற்போது கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறார். ஸ்மார்ட் போன் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகிவரும் `கீ’ , சுந்தர்.சி.யின் கலகலப்பு 2 ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. அடுத்ததாக சிம்பன்சீயை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கும் கொரில்லா படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.
டான் சாண்டி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே நடிக்கிறார். மேலும் ராதாரவி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறது. சாம் சி எஸ் இசையமைக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.