21 லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!


குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவிக்கான தேர்வுக்கு ஹால் டிக்கெட்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப, டிஎன்பிஎஸ்சி பிப்ரவரி 11ஆம் தேதி எழுத்து தேர்வு நடத்துகிறது.
கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவிக்கான தேர்வு குரூப் 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி நவம்பர் 2 ஆம் தேதி அறிவித்தது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு டிசம்பர் 12ஆம் தேதி வரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 13ஆம் தேதி மட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், விண்ணப்பக் கட்டணத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், டிசம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் சுமார் 20 லட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் பெண்களும், 9 லட்சத்து 48 ஆயிரம் ஆண்களும், 54 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று (ஜனவரி 29) இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.