மகேஷ் பாபுவின் மனிதநேயம்!


தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி செய்து நோயிலிருந்து மீட்டிருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபு ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மகேஷ் பாபு பெரிதும் எதிர்பார்த்த இந்தப் படம் தோல்வியைத் தழுவியது. தற்போது தெலுங்கில் பாரத் அனு நேனு படத்தில் நடித்துவருகிறார். சினிமாவைத் தாண்டியும் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார்.
மகேஷ் பாபுவோடு அவரது மனைவி நம்ரதாவும் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் யாராவது நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க பணவசதி இல்லாமல் கஷ்டப்படும் தகவல் அவர்கள் கவனத்துக்கு வந்தால், உடனடியாக உதவி செய்து அவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தனீஷ் என்ற ஏழை சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதை அந்தச் சிறுவனின் குடும்பம் செய்தியாக வெளியிட்டது. இந்தத் தகவலை அறிந்த மகேஷ் பாபு அவரது சிகிச்சைக்குத் தேவையான பண உதவியைச் செய்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றியிருக்கிறார்.