திருமணச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்காவுக்குள் ஜோடிகள் நுழைவதற்குத் திருமணச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோவை புதூர் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்காவில் 800 வகையான மரம், செடி, கொடிகள் உள்ளன. இந்தப் பூங்காவைப் பார்வையிட ஏராளமான மக்கள் வருவதுண்டு. பொழுதுபோக்குக்காக வரும் காதல் ஜோடிகள் அத்துமீறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமணமானவர்கள் பூங்காவுக்குள் வரும்போது, அவர்களிடம் ஆதார் அட்டையை வாங்குவதுடன், திருமணச் சான்றிதழும் கேட்கப்படுகிறது. கழுத்தில் தாலி, காலில் மெட்டி போன்றவற்றை சோதித்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.