நானும் பச்சை திராவிடன்தான்!


‘நானும் பச்சை திராவிடன்தான்’ என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று (ஜனவரி 28) தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 'கழகங்கள் இல்லா தமிழகம் கவலைகள் இல்லா தமிழகம்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அதிமுக தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டு இருக்கிறது’ என்றும், ‘திமுகவுக்கும் அதே நிலைதான்’ என்றும் திராவிடக் கட்சிகளை விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 28) கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நான் திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை. நானும் பச்சை திராவிடன்தான்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற மக்களின் விருப்பத்தையே தான் தெரிவித்ததாகவும் திமுக நினைத்திருந்தால் திராவிடப் பகுதிகளை ஒன்றுசேர்த்து 50 ஆண்டுகளில் மிகப்பெரிய திராவிட சக்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும், ஆனால், அதில் அக்கட்சி தோல்வியடைந்திருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.