பத்மாவத்: மூன்று நாட்களில் வரலாற்றுச் சாதனை!


தீபிகா படுகோன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவத் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ. 56 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ள பத்மாவத் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வந்தது. வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், வரலாறு தவறாக சித்தரிக்கப்படிருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகளும், மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்தகைய எதிர்ப்புகளை கடந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி இப்படம் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய 'பத்மாவத்' ரிலீசான 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியான ஜனவரி 25ஆம் தேதி ரூ.19 கோடியும், 2வது நாளான குடியரசு தினத்தன்று மட்டும் ரூ.32 கோடியும் வசூல் செய்தது. இதன்மூலம், குடியரசு தினத்தன்று வெளியாகி ரூ.26.30 கோடி வசூல் சாதனை புரிந்த ‘ராயீஸ்’ படத்தை ‘பத்மாவத்’ பின்னுக்கு தள்ளியுள்ளது.
இது குறித்து வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், “மும்பையில் பத்மாவத் திரைப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் ரூ.56 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்தப் படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தத் தொகையை எட்டி லாபத்தை ஈட்டத் தொடங்கிவிடும்” என பதிவிட்டுள்ளார்.