முதலிடத்தைத் தக்கவைத்த இந்திய அணி!


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. அதில் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி தொடரைக் கைப்பற்றியது. ஆனால், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களையும், தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களையும் சேர்த்தன. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ரஹானே மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 247 ரன்களைச் சேர்த்து நல்ல ஸ்கோரினை எட்டியது. 240 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பொறுமையாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடிய டீன் எல்கர் மற்றும் ஹசிம் அம்லா ஜோடி பிரிந்ததும் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.