அதிமுக: மா.செக்கள் கூட்டம் அறிவிப்பு!


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டன. திமுக நிர்வாகிகளுடன் செயல்தலைவர் ஸ்டாலின் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 27) அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு அறிவிப்பில், அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணி மற்றும் புதுப்பித்தலுக்கான பணி தொடங்கவுள்ளது. வரும் 29ஆம் தேதி முதல் அதிமுக தலைமை கழகத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். புதிய உறுப்பினர் அட்டைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமே அதிமுக அமைப்புத் தேர்தலில் போட்டியிட மற்றும் வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.