அப்பலோ செல்லும் முன் நடந்தது என்ன?


ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு போயஸ் கார்டனில் நடந்தது என்ன என்பது குறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று(ஜனவரி 26) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில், “கொலைக்காரி என்ற பட்டத்தை சசிகலாவுக்கு வழங்கினர். ஒருவரை கொல்வதற்கு 33 ஆண்டுகள் தேவையா? சசிகலாவின் உருவத்தில் வேலுநாச்சியாரை பார்க்கிறேன்.
ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உருகுலைந்து விட்டது. உயரம் குறைந்துவிட்டது. கடைசி நாளில் போயஸ் தோட்டத்தில் காரில் இருந்துக்கூட அவரால் இறங்க முடியவில்லை. சசிகலாவை அழைத்து வரசொன்னார். சசிகலா வந்தவுடன் அவரிடம் ஜெயலலிதா தனது காலை காண்பிக்கிறார்.அவரது ஷூவில் புடவை சுற்றிக்கொண்டிருந்தது. அதைக்கூட அவரால் எடுக்க முடியவில்லை. பின்னர் சசிகலா தோளில் கையை போட்டபடி வீட்டினுள் சென்றார். இதேபோல், தலைமைச் செயலகத்தில் முக்கியமானவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா உறங்கிவிட்டார்.