கிச்சன் கீர்த்தனா: அவல் கட்லெட்!


அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!
இன்றைய ஸ்பெஷலாக, அவல் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
அவல் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலைத் தனியாக எடுத்து, கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊற விடவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பச்சை பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்யவும்.
சோள மாவைக் கரைத்து, கட்லெட்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, அவல் பொடியில் புரட்டி தோசைக்கல்லில் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
கீர்த்தனா சிந்தனைகள்:
ஒருபக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை கொடுக்கலேன்னு கேட்டா, தியானத்துல இருந்தாருங்கிறாங்க. இன்னொரு பக்கம், விசாரணைக்கு ஏன் வரலைன்னு கேட்டா, மௌனவிரதம்னு சொல்றாங்க.