பழிதீர்க்குமா இந்திய அணி!


ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் நாளை (ஜனவரி 26) நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் இந்திய, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டிகள் நியூசிலாந்தில் இந்த மாதத் தொடக்கம் முதல் நடைபெற்றுவருகின்றன. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதி வாய்ப்பினைப் பெற்றுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் இந்திய, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும்.
இதற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டுள்ளது. அதில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தத் தோல்வியினால் இந்திய அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. இருப்பினும் இந்த முறை வேறுபட்ட மைதானம் என்பதால் இந்திய அணி வங்கதேச அணிக்குச் சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி இந்திய அணி இந்த சீசனில் தோல்வியே அடையாமல் சிறப்பாக விளையாடிவருகிறது. அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பதால் இந்த முறை வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி பழி தீர்க்கும் என நம்பலாம்.
இதுவரை இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். அரையிறுதியில் ஆடவிருக்கும் அந்த நான்காவது அணி எது என்பது நாளை தெரிந்துவிடும்.