விஷால் படத்திற்கு தடை!

இராமானுஜம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளர் விஷால் நாயகனாக நடித்துள்ள படம் இரும்புத் திரை. பிப்ரவரி முதல் வாரம் வெளியிட தயாராக உள்ள இப்படத்தை வாங்கவும், திரையரங்குகளில் திரையிடவும் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தடை (ரெட் ) போட்டுள்ளது.
விஷால் அலுவலகத்தில் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்தவர் முருகராஜ். இவரது கண் அசைவுக்கு ஏற்ப விஷால் செயல்படுவார் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் பண கையாடல் காரணமாக விஷால் இவரை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கினார்.
விஷால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பைனான்ஸ் வாங்குவது, திருப்பிக் கொடுக்கும் பணியை முருகராஜ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என கூறப்படுகிறது.
இதனால் விஷால் படங்களை திரையிட்ட வகையில், பைனான்ஸ் கொடுத்ததில் பாக்கியுள்ளவர்கள் உரிய ஆவணங்களை உடனடியாக விநியோகஸ்தர் கூட்டமைப்பில் சமர்ப்பிக்குமாறு விநியோகஸ்தர்கள், பைனான்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக கூட்டமைப்பு இறுதி முடிவு எடுக்கும் வரை இரும்புத்திரை படத்திற்கு தடை விதித்திருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை சம்பவத்தில் பைனான்சியர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் நடிகர் விஷால்.
அதற்கு பழி வாங்கும் விதமாக, தங்கள் அதிகாரத்தை விநியோகஸ்தர் கூட்டமைப்பு பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.