போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது: விஜயபாஸ்கர்


தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும் என்றும், போலியோ முற்றிலுமாகத் தமிழகத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜனவரி 25) திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது; மேலும் 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழகத்தில் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
"தமிழகம் முழுவதும் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புமருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து செங்கல்பட்டு அருகே, மத்திய – மாநில அரசுகள் இணைந்து 594 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பூசி மருந்துத் தயாரிப்பு நிறுவனம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள தேவையில் 75 சதவிகிதத்தை நிறைவுசெய்யும். மேலும் குளிர்பதன அறை, உறைநிலை வைப்பு அறை, 1,696 புதிய குளிர்சாதனப் பெட்டிகள், உறைநிலைப் பெட்டிகள் ஆகியவை மாநில சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.