ஜனாதிபதியை சந்திக்கும் முதல்வர்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் பல்வேறு மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுகிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்ற புகாருடன் ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.
நேற்று (ஜனவரி 23), துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் ஆய்வு செய்தார். அதற்கு முன்பும் சில துறைகளில் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று 24-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர், “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 240 முதல் பிரிவின்படி மக்கள் பிரதிநிதிகளுக்கும் சட்டமன்றத்துக்கும்தான் அதிகாரமிருக்கிறது. ஆனாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை தொடர்ந்து மீறி செயல்பட்டு வருகிறார் கிரண்பேடி. மத்திய அரசுப் பணிகளை ஆய்வு செய்ய ஜனாதிபதிக்கே அதிகாரமில்லாதபோது, அவரது பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?’’ என்று கேள்வி கேட்ட முதல்வர் நாராயணசாமி, அதன் பிறகு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.