ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இந்தியக் குழந்தைகள்!


இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4 சதவிகிதம் வரை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இழந்துள்ளது என்று அசோசெம் மற்றும் இ.ஒய். நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பொதுநல வசதிகளை அதிகரிப்பதற்கான தேவையும் இருப்பதாக இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கையில், ’உலகில் உள்ள குழந்தைகளில் 50 சதவிகித இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளாக உள்ளனர். இந்தியாவின் பெரும்பாலான பகுதி மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கவில்லை. போதுமான அளவிலும் உணவு கிடைக்கவில்லை. போதுமான அளவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைத்திட சுகாதாரம், கல்வி, துப்புரவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற கூட்டு முயற்சிகளும் தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
அசோசெம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் இதுபற்றி கூறுகையில், “சுகாதார மற்றும் சமூக சமத்துவமின்மையைப் போக்க புதிய கொள்கைகளை வகுக்க அரசு முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அரசு வகுக்கும் கொள்கைகளும், திட்டங்களும் ஊட்டச்சத்து நிலையை தற்போதைய நிலையிலிருந்து இரட்டிப்பாக்க வேண்டும்” என்றார். முன்னதாக வெளியான தேசிய குடும்பநல சர்வே-4ல் ஆறு முதல் ஐம்பத்தொன்பது மாத குழந்தைகளில் 60 சதவிகித பேருக்கு சோகைக் குறைபாடு இருப்பதாகவும், வெறும் 10 சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே போதுமான உணவு பெறுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.