கிச்சன் கீர்த்தனா: நெல்லை வெண்டைக்காய் புளிப் பச்சடி!


தோழி ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘சென்ற மாதம் பிரண்டையில் துவையல் செய்தேன். சரியாக வரவில்லை. பிசிறாகவும் சற்றே தொண்டை கரகரப்பும் இருந்தது’ எனக் கூறினாள். எனக்கும் அதே போன்ற சம்பவம் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. உடனே போன் செய்து சகோதரி ஒருவரிடம் கேட்க, மிக அழகான செய்முறை விளக்கமெல்லாம் சொல்லிவிட்டு ‘நேற்றுதான் என் சித்தப்பா செய்ததாகச் சொன்னார். செய்முறை விளக்கம் கூறினார். அதுதான் இது’ எனக் கூறியதும் சற்றே பகீர் என்றது.
ஒன்று, இதை நம்பலாமா, நம்பக்கூடாதா என்பது. இரண்டாவது, பெண்களைவிட தற்போது ஆண்கள் நன்றாகச் சமைக்கிறார்களே... நாம் ஏன் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்று தோன்றியது. சரி, நானே நன்றாக சமைத்துச் சோதித்த பிறகே உங்களிடம் சொல்கிறேன். இன்று நெல்லை ஸ்பெஷல் வெண்டைக்காய் புளிப் பச்சடி செய்வதைப் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் - கால் கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் - முக்கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 2 பின்ச்
கறிவேப்பிலை - 1 இணுக்கு
செய்முறை:
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்துக் கொள்ளவும். முதலில் கொண்டை, நுனிப்பகுதியை நீக்கி விட்டு நீள்வாக்கில் கட் செய்து பின் குறுக்கு வாக்கில் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
முதலில் குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், பிறகு தக்காளி, கீறிய பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு மசிய விடவும்.
நறுக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும். புளித் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கிய பின்பு திறக்கவும்.
அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். உப்பு கலந்து சரிபார்க்கவும். ரெடியான பச்சடியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்துக் கொட்டி கலந்து விடவும்
சுவையான நெல்லை வெண்டைக்காய் புளிப் பச்சடி ரெடி.
கீர்த்தனா சிந்தனைகள்:
பேருந்து கட்டணத்தை உயர்த்தியது அரசாங்கம்தான் என்றாலும் இன்றும் சிலர் நடத்துநரையே திட்டிக்கொண்டு இருக்கின்றனர்.