பியூட்டி ப்ரியா: கண் அழகு!


*‘என் முகத்தைத் திரைச்சீலை போட்டு மறைத்தாலும்
என் விழிப் பார்வை காட்டிக்கொடுத்து விடுகிறதே
உன் மீதான என் காதலை!’*
என்ற கவிதையில் கண் அழகையும் காதல் அழகையும் மட்டுமல்லாது, கண்வலி, கருவளையம் ஏற்பட்டதால் முகத்தை மூடிக்கொண்டிருப்பதாகவும் நன்றாக தெரிகிறது.
நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.
மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்துகொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. சோர்ந்து களைத்துப்போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.
உங்கள் கண்களின் அழகைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...
தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகுக்குக் கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம்... பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.
கண்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறை சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.
பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரி பழம் 10, அன்னாசிப் பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச்சுளை 2 (மாம்பழம் அல்லது பலா சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப்பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.
போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்குப் பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
வயதான காலத்தில் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் , கண்ணின் நீர் அழுத்தம், கண்புரை, பார்வை நரம்பு கோளாறுகள், டி.பி, கிரந்தி நோய் ஆகியவை மூலம் கண்பார்வை பாதிக்கக்கூடும். எனவே, கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இன்றைய விஞ்ஞான உலகில் கம்ப்யூட்டர் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கம்ப்யூட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுபவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது இதை E-PAIN என்கிறோம்.
இதனால் கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
கண்களில் வலி
கண் சிவத்தல்
கண்களில் நீர் வடிதல்
தலைவலி, கழுத்துவலி, முதுகுவலி
கண்களில் எரிச்சல்
பார்வையில் குழப்பம்
இந்தப் பிரச்னைகள் ஏற்படக் காரணங்கள்...
கண்களுக்கும் கம்ப்யூட்டர் திரைக்கும் உள்ள குறுகிய இடைவெளி மற்றும் நெடுநேரம் திரையைப் பார்த்து கொண்டிருத்தல்.
நெடுநேரம் கண்களை இமைக்காமல் பார்வையைச் செலுத்துதல். ஒரு நிமிடத்துக்குக் குறைந்தபட்சம் 18 முறை இமைக்காமல் மூடி திறக்க வேண்டும். அப்பொழுதுதான் கருவிழி ஈரமாக இருக்கும். மேலே கண்ட குறைபாடுகளில் இருந்து கண்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்...
கம்ப்யூட்டரின் திரைக்கும் நமது கண்களுக்கும் இடையிலான தூரம் 2 (அ)3 அடி தூரம் இருக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடத்துக்கு ஒருமுறை பார்வையை மாற்றி, பிறகு தொடரலாம்.
அரை மணிக்கு ஒருமுறை மற்றும் மணிக்கு ஒருமுறை கண்ணுக்கு ஓரிரு நிமிடங்கள் ஓய்வுகொடுப்பது நல்லது.
கண்களை அடிக்கடி மூடித் திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
*‘காதலிடம் இருந்துதான் பிறந்து கொண்டதா வெட்கம்?
உன் மேல் நான் காதல் கொண்டதும்
என் கண்கள் வெட்கப் பூக்களை அணிந்து கொண்டனவே!’*
எனக் கண்ணாடியைப் பார்த்து உங்களின் கண்களின் அழகில் நீங்களே மயங்குவதும் நடக்கலாம்.